செய்திகள்
வக்கீல் வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்ட பெண்கள்.

திருப்பத்தூரில் வழக்கு பணத்தை திரும்ப கேட்டு வக்கீல் வீட்டு முன்பு பெண்கள் தர்ணா

Published On 2017-09-18 06:31 GMT   |   Update On 2017-09-18 06:31 GMT
திருப்பத்தூரில் வக்கீல் வீட்டு முன்பு பெண்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அருகே சின்ன சமுத்திரம் இருசன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் பூபாலன். இவரது மகன் ராஜேஷ்குமார் (வயது 25). இவர், கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த கவிதா என்கிற மைனர் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதுதொடர்பாக, பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்ததாக ராஜேஷ் குமார் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார், அவரை கைது செய்தனர்.

அப்போது, ராஜேஷ்குமாரை ஜாமீனில் எடுப்பதற்காக, திருப்பத்தூர் அட்வகேட் ராமநாதன் நகரை சேர்ந்த ஒரு வக்கீலுக்கு ரூ.33 ஆயிரம் பணத்தை அவரது குடும்பத்தினர் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, பெண்ணின் பெற்றோர் வழக்கை திரும்ப பெற்றனர். இதனால், வழக்கு முடித்து வைக்கப்பட்டு ராஜேஷ் குமார் விடுவிக்கப்பட்டார். மைனர் பெண்ணாக இருந்த கவிதாவும் 18 வயது நிரம்பி திருமண வயதை எட்டினார்.

இதையடுத்து, கவிதாவை அவரது பெற்றோர், ராஜேஷ் குமாருடன் சேர்த்து வைத்தனர். இந்த நிலையில், வழக்கு சம்பந்தமாக கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு, ராஜேஷ்குமாரும், அவரது பெற்றோரும், அந்த வக்கீலை அணுகினர்.

வக்கீல், பணத்தை தருவதாக கூறினார். ஆனால், பணத்தை இன்னும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ராஜேஷ் குமார், தனது தாய் ஜெயந்தி மற்றும் உறவினர்கள் அமுலு, வேளாங்கன்னி ஆகியோருடன் இன்று காலை அட்வகேட் ராமநாதன் நகரில் உள்ள வக்கீல் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வக்கீல் வீட்டில் இல்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. வக்கீலின் தந்தை மட்டுமே வீட்டில் தனியாக இருந்தார்.

இதுப்பற்றி, தகவலறிந்த டவுன் போலீசார் விரைந்து வந்து, ராஜேஷ்குமார் உள்பட தர்ணாவில் ஈடுபட்ட பெண்களை, போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News