செய்திகள்

எடப்பாடி பழனிசாமி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: சுப்பிரமணியசாமி பேட்டி

Published On 2017-09-08 09:17 IST   |   Update On 2017-09-08 09:17:00 IST
சசிகலாவால் நியமிக்கப்பட்டவர் தான் முதல்-அமைச்சர் பழனிசாமி. சசிகலா ஆதரவு வாபஸ் பெறப்பட்டதால் முதல்-அமைச்சர் பழனிசாமி ராஜினாமா செய்யவேண்டும் என்று சுப்பிரமணியசாமி கூறினார்.
ஆலந்தூர்:

பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி எம்.பி. சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசுக்கு ஆதரவு வாபஸ் என தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் கூறியிருந்தால் கவர்னர் சட்டசபையை கூட்ட உத்தரவிட வேண்டும். ஆனால் முதல்-அமைச்சர் அகற்றப்பட வேண்டும் என மனு கொடுத்திருந்தால் கவர்னர் எதுவும் செய்யமுடியாது.

சசிகலாவால் நியமிக்கப்பட்டவர் தான் முதல்-அமைச்சர் பழனிசாமி. சசிகலா ஆதரவு வாபஸ் பெறப்பட்டதால் கட்சியின் ஒற்றுமைக்காக அ.தி.மு.க. இணைந்து செயல்படவும், தி.மு.க.வுக்கு வாய்ப்பு தரக்கூடாது என்ற எண்ணத்திலும் முதல்-அமைச்சர் பழனிசாமியே ராஜினாமா செய்யவேண்டும். வேறு யாரையாவது முதல்-அமைச்சராக சசிகலா நியமிக்க வேண்டும். அப்போது தான் தமிழகத்திற்கு நல்ல சூழ்நிலை ஏற்படும்.

தமிழகத்தில் நடக்கும் குழப்பங்களால் தனி கவர்னர் நியமிக்கப்பட உள்ளார். உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும். இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தவறு செய்துள்ளது. தேர்தல் ஆணையம் பிற்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News