செய்திகள்

மயிலாடுதுறை அருகே சுவர் இடிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

Published On 2017-09-06 09:57 IST   |   Update On 2017-09-06 12:27:00 IST
சுவர் இடிந்து கணவன்-மனைவி உள்பட 3 பேர் பலியானர்கள். இச்சம்பவம் குத்தாலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குத்தாலம்:

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருவாவடுதுறை செக்கடி கீழத் தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (42). விவசாய கூலி தொழிலாளி.

இவரது மனைவி கார்த்திகா (34). இவர்களுக்கு வர்ஷினி (11), சாதித்யா (7) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வெங்கட்ராமன் தனது வீட்டை விரிவாக்கம் செய்து வந்தார். இதற்காக புதிய சுவர் கட்டப்பட்டு வந்தது.

நேற்று இரவு அவர் குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பழைய சுவர் இடிந்து விழுந்தது. இதில் வெங்கட்ராமன், கார்த்திகா, வர்ஷினி, சாதித்யா ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.

அவர்களில் வெங்கட்ராமன், கார்த்திகா, சாதித்யா ஆகியோர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். வர்ஷினி பலத்த காயத்துடன் முனகி கொண்டிருந்தார். இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கையில் பலத்த காயம் அடைந்த அவரை மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான 3 பேர் உடல்களையும் தாசில்தார் திருமாறன் பார்வையிட்டார்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுவர் இடிந்து 3 பேர் பலியான சம்பவம் குத்தாலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News