செய்திகள்

வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம்: வருகிற 7-ந் தேதி தேர் பவனி

Published On 2017-08-30 11:46 GMT   |   Update On 2017-08-30 11:46 GMT
வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 7-ந் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி நடைபெறுகிறது.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா நேற்று இரவு 7 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருக் கொடியை தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் புனிதம் செய்து வைத்தார். புனிதம் செய்யப்பட்ட பின் அக்கொடி விரிக்கப்பட்டு வாத்தியங்கள், வாணவேடிக்கைகள், மாதா வாழ்த்துக்கள் முழங்க வேளாங்கண்ணி கடைத் தெரு, ஆரிய நாட்டு தெரு, கடற்கரை சாலை வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

பல்லாயிர கணக்கானோரின் வாழ்த்து முழக்கங்களுடன் மாதாவின் திருபெருமை பாடல் ஒலிக்க தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார், பேராலய அதிபர் பிரபாகர் அடிகளார், உதவி பங்கு தந்தைகள் ஆகியோர் கொடி கம்பத்தில் கொடியை ஏற்றினர்.

இதை தொடர்ந்து வாணவேடிக்கை நடைபெற்றது. கொடி மரத்தை நோக்கி பக்தர்கள் காசுகளை வீசி எறிந்தனர். அக் காசுகளை மற்ற பக்தர்கள் மாதாவின் பிரசாதமாக கருதி எடுத்து சென்றனர்.

தொடர்ந்து பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு ஆராதனை, நற்கருணை ஆசீர்வாதம், தமிழில் திருப்பலி நிறைவேற்றப்பட்டன. பேராலயம் முழுவதும் பல வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவை பலாக்கும் வண்ணம் ஒளி வெள்ளத்தில் பேராலயம் ஜொலித்தது.

கொடியேற்றத்தை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. வருகிற 7-ந் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி நடைபெறுகிறது.

Tags:    

Similar News