செய்திகள்

வேப்பூர் அருகே லாரி மீது கார் மோதல்: பெண் உடல் நசுங்கி பலி

Published On 2017-08-14 04:49 GMT   |   Update On 2017-08-14 04:49 GMT
வேப்பூர் அருகே இன்று அதிகாலை லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். மேலும் டாக்டர் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
வேப்பூர்:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இரும்புலிகுறிச்சியை சேர்ந்தவர் சேரன் (வயது 45). இவர் சென்னை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் எலும்பு முறிவு டாக்டராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் இவர் தனது சொந்த ஊரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி சேரன், அவரது குழந்தைகள் 2 பேர், தாய் பழனியம்மாள் (60) மற்றும் உறவினர் ஒருவருடன் சென்னையில் இருந்து இரும்புலிகுறிச்சிக்கு காரில் புறப்பட்டார்.

அவர்கள் குலதெய்வ கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பின்னர் நேற்று இரவு ஊரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டனர். காரை டாக்டர் சேரன் ஓட்டினார்.

அந்த கார் இன்று அதிகாலை கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது கார் திடீரென்று சேரனின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.

இதில் காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த சேரனின் தாய் பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காரில் இருந்த டாக்டர் சேரன், அவரது குழந்தைகள் மற்றும் அவரது உறவினர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

வேப்பூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காரின் இடிபாட்டுக்குள் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News