செய்திகள்

டெங்கு நோய்க்கு இதுவரை 35 பேர் பலியாகி உள்ளனர்: முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்

Published On 2017-08-11 11:05 IST   |   Update On 2017-08-11 11:05:00 IST
தமிழ்நாட்டில் டெங்கு நோய்க்கு இதுவரை 35 பேர் பலியாகி உள்ளனர் என்று முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஈரோடு:

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் இன்று ஈரோடு வந்தனர். ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்தனர்.

அவர்களுடன் சுகாதாரத் துறை மாநில முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணனும் வந்திருந்தார்.

ஆய்வு பணிக்கு பிறகு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

டெங்கு நோயை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது டெங்கு நோயால் யாரும் பீதி அடைய வேண்டாம். டெங்கு நோயை குணப்படுத்த முடியும்.



டெங்கு நோயை பரப்பும் கொசு நல்ல தண்ணீரில்தான் உற்பத்தியாகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டில் தண்ணீரை சேமித்து வைக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.

எந்த பாத்திரத்தில் தண்ணீர் இருந்தாலும் அதை பத்திரமாக மூடி வையுங்கள் தண்ணீர் தேங்கி இருக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்

டெங்குவை கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நில வேம்பு குடிநீரை தொடர்ந்து அருந்தி வாருங்கள் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால் உரிய மருத்துவரை அணுகுங்கள்.

தமிழ்நாடு முழுவதும் டெங்கு நோயை கட்டுப்படுத்த 25 ஆயிரம் கள பணியாளர்கள் உள்ளனர். 3500 சுகாதார அலுவலர்கள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

டெங்கு நோய்க்கு இதுவரை தமிழ்நாட்டில் 35 பேர் பலியாகி உள்ளனர். இதில் 15 பேர் நேரிடையாகவும் மீதிபேர் டெங்கு பாதிப்பு இதர நோய்களால் இறந்து உள்ளனர்.

டெங்கு நோயை கட்டுப்படுத்த முழுவீச்சில் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News