செய்திகள்

கதிராமங்கலம் பிரச்சினைக்கு தீர்வு கோரி மயிலாடுதுறை - ஆடுதுறையில் கடைகள் அடைப்பு

Published On 2017-07-11 09:51 IST   |   Update On 2017-07-11 09:51:00 IST
கதிராமங்கலம் பிரச்சினைக்கு தீர்வு காண கோரி மயிலாடுதுறை மற்றும் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
மயிலாடுதுறை:

கதிராமங்கலம் பிரச்சினைக்கு தீர்வு காண கோரி மயிலாடுதுறை மற்றும் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.



தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்துளை கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

கடந்த 30-ந் தேதி எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். போராட்டம் தொடர்பாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் போராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை விடுவிக்க கோரி கதிராமங்கலத்தில் தொடர்ந்து கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இன்று 11-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், பழ. நெடுமாறன், டைரக்டர் கவுதமன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கதிராமங்கலம் வந்து மக்களை சந்தித்து கருத்துக்களை கேட்டனர்.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில தலைவர் வெள்ளையன் கடந்த 7-ந் தேதி கதிராமங்கலம் வந்து வர்த்தகர்கள் மற்றும் மக்களை சந்தித்தார்.

இந்த நிலையில் கதிராமங்கலம் பிரச்சினைக்கு தீர்வு காண கோரி வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

அதன் படி இன்று (செவ்வாய்கிழமை) கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை, திருவிடைமருதூர், திருப்பனந்தாள், திருபுவனம், பந்த நல்லூர், காகித பட்டறை தத்துவாஞ்சேரி, அணைக்கரை, நரசிங்கன் பேட்டை,திருவாலங்காடு, நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

Similar News