சென்னிமலையில் பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம்: தறிப்பட்டறை ஊழியரை பிடிக்க வேட்டை
ஈரோடு:
சென்னிமலையில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படிப்பவர் ராணி (வயது 16). பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவரது தந்தையும், தாயும் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்க்கிறார்கள்.
அவர்கள் தினமும் திருப்பூருக்கு சென்று வேலை பார்த்துவிட்டு சென்னிமலைக்கு வந்து விடுவார்கள். இவர்களது வீட்டின் அருகே ராணியின் தாத்தா வீடு உள்ளது.
எனவே ராணியை தைரியமாக பெற்றோர் விட்டு செல்வார். இந்த நிலையில் ராணியின் பெற்றோர் வீட்டை வேறு இடத்துக்கு மாற்றினர்.
எனினும் ஏற்கனவே இருந்த இடத்தில் உள்ள தோழிகளை ராணி பார்க்க நினைத்தார். எனவே கடந்த 1-ந் தேதி அந்த பகுதிக்கு சென்றார். தோழிகளை சந்தித்து பேசினார்.
அந்த பகுதியில் ஒரு தறிப்பட்டறை உள்ளது. அதில் அந்த பகுதியை சேர்ந்த சந்துரு (22) என்ற வாலிபர் வேலை பார்த்தார். அவரையும் ராணி சந்தித்து பேசினார்.
அப்போது ராணிக்கு சந்துரு பணம் கொடுத்ததாகவும், அந்த பணத்தில் ராணி நோட்டு வாங்கியதாகவும் தெரிகிறது. பின்னர் தோழிகளுடன் அந்த பகுதியில் ராணி நடமாடினார்.
இந்த நிலையில் ராணியை ஆசை வார்த்தை கூறி சந்துரு தான் வேலை பார்க்கும் தறிப்பட்டறைக்கு அழைத்து சென்றார்.
பின்னர் தறிப்பட்டறையை பூட்டிக்கொண்டு ராணியை சந்துரு பாலியல் பலாத்காரம் செய்தார். சந்துருவின் பிடியில் சிக்கிய ராணி அலறி சத்தமிட்டார்.
ராணியின் சத்தம் கேட்டு அவரது தாத்தா அங்கு வந்தார். அப்போது தறிப்பட்டறையில் இருந்து சந்துரு வெளியே தப்பி ஓடினார்.
தறிப்பட்டறைக்குள் நடந்ததை ராணி தனது தாத்தாவிடம் கூறினார். ராணி பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக சென்னிமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
பின்னர் இந்த வழக்கு ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. அவர்கள் ராணியை பாலியல் பலாத்காரம் செய்த சந்துரு மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
தற்போது சந்துரு தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட ராணிக்கு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடந்தது.