மர்ம காய்ச்சலுக்கு 4-ம் வகுப்பு மாணவி பலி
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள சித்தோடு ரோஜா நகர் பகுதியை சேர்ந்தவர். செந்தில்குமார். இவரது மனைவி பிரபா.
இவர்களது மகள் தீபிகா, மகன் நவீன்குமார். தீபிகா சித்தோட்டில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு தீபிகா காய்ச்சலால் உடல் நிலை பாதிக்கப்பட்டார். அவரை செந்தில்குமார் சித்தோடு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றார்.
அங்கு தீபிகா சிகிச்சை பெற்றார். ஈரோடு, சேலம் பகுதிகளில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு மர்ம காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
சிகிச்சை பெற்ற தீபிகா வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். இந்த நிலையில் தீபிகா திடீரென பரிதாபமாக இறந்தார்.
சித்தோடு ஆரம்ப சுகா தார நிலையத்தில் போதிய மருத்துவ வசதிகள் மற்றும் டாக்டர்கள் இல்லாத காரணத்தால்தான் இது போன்ற உயிர் இழப்புகள் ஏற்படுகிறது என்று உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
இதேபோல ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஏமம்பாளையத்தை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 22) என்ற பட்டதாரி மாணவரும் மர்ம காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார்.
காய்ச்சலால் அவதிப்பட்ட அவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.