செய்திகள்

என் கவுண்டரில் கொன்று விடுவார்கள் - பெண் மாவோயிஸ்ட் கணவர் ஆவேசம்

Published On 2017-07-04 12:24 IST   |   Update On 2017-07-04 12:24:00 IST
பத்மாவை ஆந்திர போலீசார் கைது செய்து இருப்பது சட்ட விரோதம். அவரை போலீசார் என் கவுண்டர் நடந்ததாக கூறி சுட்டுக்கொன்று விடுவார்கள் என்று பத்மாவின் கணவர் கூறி உள்ளார்.
ஈரோடு:

பெண் மாவோயிஸ்ட் பத்மாவின் கணவர் விவேக். இவரும் மாவோயிஸ்டு நடவடிக்கையில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த 2012-ம் ஆண்டு தேனி மாவட்டம் பெரியகுளம் இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி அளித்ததாக கைது செய்யப்பட்டார்.

5 ஆண்டு சிறைத் தண்டனைக்குப்பின் சமீபத்தில் விவேக் விடுதலையானார். பத்மா கைதான தகவலை அவரிடம் போலீசார் தெரிவித்தனர். அப்போது விவேக் நிருபர்களிடம் கூறியதாவது:-

பத்மாவை ஆந்திர போலீசார் கைது செய்து இருப்பது சட்ட விரோதம். அவரை போலீசார் லாக்கப்பில் அடைத்து சித்ரவதைப்படுத்துவார்கள் என்று அஞ்சுகிறேன். இல்லையெனில் என் கவுண்டர் நடந்ததாக கூறி சுட்டுக் கொன்று விடுவார்கள். சட்டப்படி அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புரட்சிகர ஜனநாயக முன்னணி அமைப்பின் தலைவர் வரவரராவ் கூறுகையில், பத்மாவை எர்ணாகுளத்தில் இருந்து ஈரோடு வந்தபோது ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். அவர் கைதான விதம் கடத்தப்பட்டது போல் உள்ளது. அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது. அவரை உடனே சட்டப்படி கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றார்.


Similar News