செய்திகள்
களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழும் காட்சி.

களக்காடு தலையணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

Published On 2017-07-03 09:18 GMT   |   Update On 2017-07-03 09:18 GMT
களக்காடு பகுதியில் பெய்த சாரல் மழையை அடுத்து தற்போது தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் தலையணைக்கு படையெடுத்து சென்ற வண்ணம் உள்ளனர்.
களக்காடு:

களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணை இயற்கை எழில் சூழ்ந்த பகுதி ஆகும். ஆர்ப்பரித்து கொட்டும் தலையணையில் ஆனந்த குளியலிட தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். தலையணையில் தண்ணீர் வற்றியதால் கடந்த மே 1-ம் தேதி முதல் தலையணை மூடப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் களக்காடு பகுதியில் பெய்த சாரல் மழையை அடுத்து தற்போது தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த 28-ம் தேதி முதல் மீண்டும் தலையணை திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து சுற்றுலா பயணிகள் தலையணைக்கு படையெடுத்து சென்ற வண்ணம் உள்ளனர். விடுமுறை தினமான நேற்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்திருந்தனர். குற்றாலத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் தலையணைக்கும் வந்து சென்றதால் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதனையொட்டி களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் முருகானந்தம் மேற்பார்வையில் களக்காடு வனசரக அலுவலர் புகழேந்தி மற்றும் வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழும் காட்சி.

Tags:    

Similar News