செய்திகள்

பண்ருட்டி அருகே இளம்பெண்ணை காரில் கடத்தி உயிருடன் எரித்துக்கொல்ல முயற்சி

Published On 2017-07-01 10:09 GMT   |   Update On 2017-07-01 10:09 GMT
பண்ருட்டி அருகே காரில் இளம்பெண்ணை கடத்தி உயிருடன் எரித்து கொள்ளமுயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பண்ருட்டி:

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி சக்தி (வயது 23). இவர் நேற்று இரவு சங்கராபுரம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 4 பேர் சக்தியிடம் நைசாக பேச்சுக்கொடுத்தனர். சக்தி பேசிக்கொண்டிருக்கும் போதே அவர்களில் ஒருவர் சக்தியின் முகத்தில் துணியால் அமுக்கிய சிறிது நேரத்தில் சக்தி மயக்கமடைந்தார்.

பின்னர் அந்த 4 பேரும் சேர்ந்து சக்தியை காரில் கடத்தி சென்றனர். அந்த கார் இன்று காலை கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கானாஞ்சாவடியில் உள்ள முந்திரிதோப்பு அருகே காரை நிறுத்தி அங்கிருந்து சக்தியை மர்மநபர்கள் முந்திரிதோப்புக்கு தூக்கி சென்றனர். பின்னர் காரில் இருந்த டீசலை எடுத்து சக்தியின் மீது ஊற்றி உயிருடன் தீ வைத்தனர். இதனால் சக்தி வலிதாங்க முடியாமல் அலறினார். உடனே சக்தி இறந்துவிடுவார் என நினைத்த மர்ம நபர்கள் 4 பேரும் அங்கிருந்து காரில் தப்பி சென்றுவிட்டனர்.

ஆனால் பலத்த தீக்காயங்களுடன் உயிர் பிழைத்த சக்தி அங்கிருந்து நடந்து சென்றார். ஆனால் சக்தி கானாஞ்சாவடி பஸ் நிலையம் வந்ததும் மயங்கி விழுந்து விட்டார். இந்த நிலையில் அந்த வழியாக சென்றவர்கள் தீக்காயங்களுடன் இளம்பெண் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்ததர். உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சக்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த காடாம்புலியூர் இன்ஸ்பெக் டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயதேவி தலைமையிலான போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். அங்கு சக்தி மயங்கியநிலையில் சிகிச்சை பெறுவதால் அவரிடம் மேற்கொண்டு விசாரிக்க முடியவில்லை. மேலும் சக்தியை எதற்காக தீவைத்து எரித்தார்கள் என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சக்திக்கும் அந்த மர்மநபர்களுக்கும் இடையே முன்விரோதம் உள்ளதா? அல்லது காரில் கடத்திசென்று கற்பழித்துவிட்டு தீவைத்து எரித்தார்களா? என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம்பெண்ணை உயிருடன் எரித்து கொள்ளமுயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News