செய்திகள்

புதுக்கோட்டை அருகே தந்தை-மகனை அரிவாளால் வெட்டி 50 பவுன் நகை பறிப்பு

Published On 2017-06-19 10:52 IST   |   Update On 2017-06-19 10:52:00 IST
புதுக்கோட்டை அருகே தந்தை-மகனை அரிவாளால் வெட்டி விட்டு 50 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமயம்:

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கே. புதுப்பட்டி கடை வீதியில் நகைக்கடை வைத்திருப்பவர் செல்வராஜ் (வயது 50). இவரது மகன் தினேஷ்பாபு (20). நேற்றிரவு இவர்கள் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டினர். பின்னர் அவர்கள் இருவரும் வீட்டிற்கு புறப்பட்டனர். அப்போது ஒரு பையில் 50 பவுன் நகையை எடுத்து சென்றனர்.

தல்லாம்பட்டி அருகே சென்ற போது பின்னால் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், செல்வராஜ் சென்ற மோட்டார் சைக்கிளை முந்திச்சென்று திடீரென வழி மறித்தனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தினேஷ்பாபு மற்றும் செல்வராஜை சரமாரியாக வெட்டினர். பின்னர் அவர்கள் வைத்திருந்த 50 பவுன் நகையை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்த தகவல் அறிந்ததும் கே.புதுப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் தந்தை- மகன் இருவரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. லோகநாதன் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினார்.

Similar News