செய்திகள்

பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம்: காதல் ஜோடி மணகோலத்தில் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்

Published On 2017-06-08 12:34 IST   |   Update On 2017-06-08 12:34:00 IST
கொடுமுடி அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி மேஸ்திரியை கரம்பிடித்த கல்லூரி மாணவி தனது காதலனுடன் பாதுகாப்பு கேட்டு போலீசில் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
கொடுமுடி:

கொடுமுடி அருகே உள்ள சோளங்காபாளையம் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் வீராசாமி, விவசாயி. இவரது மகன் நந்தகோபால் (வயது 24).

நந்தகோபால் டிப்ளமோ முடித்து விட்டு தற்போது மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த வரதராஜன் என்பவரின் மகள் பூர்ணிமா (18). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு ஐ.டி. படித்து வருகிறார்.

இந்த நிலையில் நந்த கோபாலும் பூர்ணிமாவும் கடந்த 5 ஆண்டாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு இருவர் வீட்டு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் அவர்கள் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர்.

இதையடுத்து காதல் ஜோடியினர் வீட்டைவிட்டு வெளியேறினர். கொடுமுடி அடுத்த பாசூர் பழனியாண்டவர் கோவிலில் நண்பர்கள் முன்னிலையில் காதலர்கள் மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.

பிறகு காதல் தம்பதியினர் மாலையும் கழுத்துமாக மலையம்பாளையம் போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

இதுகுறித்து போலீசார் இருவரது வீட்டு பெற்றோருக்கும் அழைப்பு விடுத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

Similar News