செய்திகள்

அரியலூரில் சூறைக்காற்றுடன் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

Published On 2017-06-06 15:57 IST   |   Update On 2017-06-06 15:57:00 IST
அரியலூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 28-ந்தேதி அக்னி நட்சத்திரம் முடிந்த பின்பும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கினர்.

வேலை நிமித்தமாகவும், போக்குவரத்திற்காகவும் வெளியே செல்கிறவர்கள் வெயிலை தாங்கி கொள்ள முடியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில் அரியலூரில் நேற்று பகலில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது .மாலையில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டன. குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. அதன் பின்னர் லேசாக தூற ஆரம்பித்த மழை நேரம் செல்ல செல்ல சூறைக்காற்றுடன் பலமாக பெய்தது. இந்த மழையானது இரவு வரை நீடித்தது.

அரியலூரில் பெய்த பலத்த மழையின் காரணமாக ராஜூநகர், மின்நகர், அரியலூர் புறவழிச்சாலை, கலெக்டர் அலுவலக பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

வீடுகளில் வைக்கப்பட்டிருந்த வாழை, முருங்கை, தென்னை மரங்கள் வேரோடு கீழே சாய்ந்தன. ஆங்காங்கே மின்கம்பியும் அறுந்து விழுந்தது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Similar News