செய்திகள்
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் பரமசிவம்.

மூதாட்டி கொலை: விசாரணைக்கு போலீசார் அழைத்து சென்றவர் தற்கொலை முயற்சி

Published On 2017-05-26 14:43 IST   |   Update On 2017-05-26 14:43:00 IST
மூதாட்டியை கொலை செய்ததாக ஒப்புக்கொள்ளுமாறு போலீசார் வற்புறுத்தியதால்தான் பரமசிவம் தற்கொலைக்கு முயன்றதாக அவரது உறவினர்கள் புகார் கூறுகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொடுமுடி:

கொடுமுடி அருகே உள்ள கரட்டாம்பாளையத்தை சேர்ந்த மூதாட்டி ராமலட்சுமி (வயது 73) கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் துப்பு துலங்காமல் இருந்து வந்தது.

போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கொலை வழக்கு தொடர்பாக அதே ஊரை சேர்ந்த சதீஷ் (20) மீது தனிப்படை போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

டிப்ளமோ படித்து பாதியில் நின்ற சதீசின் வங்கி கணக்கு புத்தகத்தை எடுத்து போலீசார் விசாரித்தனர். அப்போது பட்டுக்கோட்டையில் இருந்து சதீசின் வங்கி கணக்குக்கு ரூ. 2 ஆயிரம், ரூ. 3 ஆயிரம், ரூ. 5 ஆயிரம் என பணம் போடப்பட்டு இருந்தது.

எனவே போலீசாருக்கு சதீஷ் மீது சந்தேகம் அதிகரித்தது. சதீஷை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். பட்டுக்கோட்டையில் இருந்து அவருக்கு பணம் போட்டவரிடமும் விசாரணை நடந்தது.

அப்போது அந்த நபர் சதீஷ் ஏழை மாணவன் என்பதால் பணம் அனுப்பியதாக தெரிவித்தார். இந்த நிலையில் விசாரணைக்கு வந்து சென்று கொண்டிருந்த சதீஷை திடீரென காணவில்லை.

எனவே சதீஷ் தாயின் அண்ணன் பரமசிவத்திடம் சதீஷை பற்றி விசாரித்தனர். திருப்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரியும் பரமசிவத்திடம் சதீஷை எங்கே? என்று கேட்டு விசாரணை நடந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பரமசிவத்தை போலீசார் மீண்டும் விசாரணைக்கு அழைத்து வந்தனர். சிவகிரி போலீஸ் நிலையத்தில் அவரிடம் விசாரணை நடந்தது.

அப்போது சதீஷை எங்கே? என்று கேட்டு போலீசார் தங்கள் பாணியில் விசாரித்தனர். மேலும், ‘‘சதீஷை அழைத்து வா. இல்லாவிட்டால் மூதாட்டியை நான்தான் கொன்றேன்’’ என எழுதி தருமாறு கேட்டு மிரட்டியதாக தெரிகிறது.

பின்னர் வெள்ளிக்கிழமை (அதாவது இன்று) சதீஷை அழைத்து வருமாறு கூறி பரமசிவத்தை போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் இன்று காலை வீட்டில் இருந்த பரமசிவம் வி‌ஷ மாத்திரை தின்றார். இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கொடுமுடி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பரமசிவம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூதாட்டியை கொலை செய்ததாக ஒப்புக்கொள்ளுமாறு வற்புறுத்தியதால்தான் பரமசிவம் தற்கொலைக்கு முயன்றதாக அவரது உறவினர்கள் புகார் கூறுகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Similar News