செய்திகள்

திருமுல்லைவாயல் அருகே மினிலாரி மோதி சிறுவன் பலி

Published On 2017-04-30 22:08 GMT   |   Update On 2017-04-30 22:09 GMT
திருமுல்லைவாயல் அருகே மினிலாரி மோதி சிறுவன் பலியானான். இதனையடுத்து டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி:

மாங்காடு அருகே உள்ள கோவூர் அனு கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன். ஆட்டோ டிரைவர். இவரது மகன் தீபக் (வயது 10). அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால், திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கம் அய்யப்பன் நகர் முருகன் கோவில் தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சில தினங்களுக்கு முன்பு சிறுவன் தீபக் வந்தான்.

இந்த நிலையில் நேற்று மாலை வீட்டின் அருகே தீபன் விளையாடிக்கொண்டு இருந்தான். அப்போது அங்கு சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் கேன் போடும் மினி லாரியை அதன் டிரைவர் அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (32) என்பவர் பின்பக்கமாக ஓட்ட முற்பட்டார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மினிலாரியின் பின்னால் விளையாடிக்கொண்டு இருந்த தீபக் மீது மினிலாரி மோதியது. இதில் சக்கரத்தில் சிக்கி தீபக் படுகாயம் அடைந்தான். உடனே சிறுவனை மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீபக்கை பரிசோதித்து பார்த்து விட்டு ஏற்கனவே அவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மினிலாரி டிரைவர் விக்னேசை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 
Tags:    

Similar News