செய்திகள்
தண்ணீரில் மூழ்கி பலியான ரகுபதி, சங்கர்.

கொடுமுடியில் காவிரி ஆற்றில் தேங்கி நின்ற தண்ணீரில் மூழ்கி 2 பேர் பலி

Published On 2017-04-27 10:49 IST   |   Update On 2017-04-27 10:49:00 IST
கொடுமுடியில் காவிரி ஆற்றில் தேங்கி நின்ற தண்ணீரில் மூழ்கி 2 பேர் பலியாகிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொடுமுடி:

ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றில் கடும் வறட்சி காரணமாக தண்ணீர் முற்றிலும் வறண்டு விட்டது. ஆங்காங்கே தண்ணீர் குட்டைபோல் உள்ளது.

கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் அருகே காவிரி ஆற்றில் மணல்மேடு என்ற பகுதி உள்ளது. இங்கு காங்கயம் கூட்டு குடிநீருக்கான குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்க குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பெரிய குழி தோண்டப்பட்டு உள்ளது. தற்போது இங்கு தண்ணீர் தேங்கி உள்ளது.

திருப்பூர் வாவி பாளையத்தைச் சேர்ந்த 20 பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுத்து செல்ல வந்தனர்.

இதில் முருகன் என்பவரின் மகன் ரகுபதி (வயது 18) செல்வம் என்பவரின் மகன் சங்கர் (23) ஆகிய 2 பேரும் கூட்டு குடிநீர் தொட்டியை சுற்றி உள்ள தேங்கிய தண்ணீரில் குளிக்க ஆசைப்பட்டனர்.

இதையொட்டி அவர்கள் அந்த தண்ணீரில் இறங்கி குளித்தனர்.

இதில் இருவரும் ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர். இதனால் தண்ணீரில் மூழ்கினார்கள். சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தனர்.

வாலிபர்கள் இருவருக்கும் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.

இதை கண்டு அவர்களுடன் வந்தவர்கள் கதறிஅழுதனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் கொடுமுடி போலீசார் அங்கு விரைந்தனர். பலியான 2 பேர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தண்ணீரில் மூழ்கி பலியான ரகுபதி, சங்கர்.

Similar News