செய்திகள்

விருத்தாசலம் அருகே பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர் பலி

Published On 2017-04-25 09:35 GMT   |   Update On 2017-04-25 09:35 GMT
விருத்தாசலம் அருகே பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
விருத்தாசலம்:

விருத்தாசலம் அருகே உள்ள கம்மாபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 40). இவர் விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

சமீபத்தில் இவர் சென்னையில் நடந்த அலுவலக உதவியாளர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர் ஊருக்கு திரும்பி வந்த போது, திடீரென அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து, அவரை புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரின் ரத்த மாதிரியை எடுத்து டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, பிரகாசுக்கு பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பு உள்ளதை கண்டறிந்தனர்.

பின்னர், ஆஸ்பத்திரியில் அவருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

பன்றிக்காய்ச்சலால் பலியான பிரகாசுக்கு சாந்தி (36) என்ற மனைவியும், கிஷோர் (9) என்ற மகனும், சாருமதி (4) என்ற மகளும் உள்ளனர்.

Similar News