செய்திகள்

திருவண்ணாமலை அருகே ரூ.2000 லஞ்சம் வாங்கிய கால்நடை டாக்டர் கைது

Published On 2017-04-06 14:34 IST   |   Update On 2017-04-06 14:34:00 IST
திருவண்ணாமலை அருகே ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற புகாரில் கால்நடை டாக்டர் கைது செய்யப்பட்டார்.
தண்டராம்பட்டு:

திருவண்ணாமலை அடுத்த தானிப்பாடி போந்தை கிராமத்தை சேர்ந்தவர் சம்பத். விவசாயி. இவர், பசுமாடு வளர்த்து வந்தார். அந்த மாட்டின் மீது இன்சுரன்ஸ் நிறுவனத்தில் ரூ.30 ஆயிரம் இன்சூரன்ஸ் செய்திருந்தார்.

இந்த நிலையில் மாடு இறந்து விட்டது. இன்சூரன்ஸ் பணம் பெறுவதற்காக சம்பத், அரசு கால்நடை டாக்டர் ஜலகண்டேஸ்வரர் (வயது 47) அணுகி மாடு இறந்ததற்கான சான்றிதழ் கேட்டார்.

சான்றிதழ் கொடுக்க வேண்டுமெனில், ரூ.3000 லட்சம் தர வேண்டுமென்று டாக்டர் கூறினார். சம்பத் ரூ.2000 லஞ்சம் தருவதாக முதலில் ஒப்புக்கொண்டார். பிறகு பணம் கொடுக்க அவர் விரும்பாத அவர், இதுப்பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தலைமையில் திருவண்ணாம லை இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், கணேசன் மற்றும் போலீசார் கால்நடை டாக்டரை வலை விரித்து பிடிக்க முடிவு செய்தனர்.

அதன்படி, இன்று காலை ரசாயனம் தடவிய ரூ.2000 பணத்தை சம்பத்திடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பினார். மாறு வேடத்தில் ஏ.டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மற்றும் போலீசார் பின் தொடர்ந்து சென்றனர்.

கால்நடை டாக்டர் ஜலகண்டேஸ்வரரிடம் அந்த பணத்தை சம்பத் கொடுத்தார். அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கால்நடை டாக்டரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மேலும் கைது செய்த கால்நடை டாக்டரை அவரது அலுவலகத்தில் வைத்தே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Similar News