செய்திகள்

உங்களுடன் நான் நிகழ்ச்சி: சிதம்பரத்தில் இன்று தொண்டர்களுடன் விஜயகாந்த் சந்திப்பு

Published On 2017-02-27 10:18 GMT   |   Update On 2017-02-27 10:18 GMT
விஜயகாந்த் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து ‘உங்களுடன் நான்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொண்டர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார்.

சிதம்பரம்:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து ‘உங்களுடன் நான்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொண்டர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று உங்களுடன் நான் நிகழ்ச்சியில் விஜயகாந்த் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சி முடிந்தபின்பு அவர் அங்கிருந்து கார் மூலமாக சிதம்பரம் புறப்பட்டார். கடலூர் மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடியில் அவருக்கு தே.மு.தி.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் சிதம்பரம் பஸ்நிலையம் அருகே உள்ள சாரதா ராம் ஓட்டலில் இரவு தங்கினார்.

கடலூர் தெற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் சிதம்பரம் சிவகாமிஅம்மை கலையரங்கத்தில் ‘உங்களுடன் நான்’ நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார். தொண்டர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சி காலை 10 மணி முதல் மதியம் 12 மணிவரை நடைபெற்றது.

நிகழ்ச்சியையொட்டி சிதம்பரத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் கொடி, தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தெற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் சபா.சசிகுமார் மற்றும் துணை செயலாளர் பாலு ஆகியோர் செய்திருந்தனர்.

கடலூர் வடக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் ‘உங்களுடன் நான்’ நிகழ்ச்சி பண்ருட்டி அருகே உள்ள காடாம் புலியூர் ஏ.வி.மஹாலில் இன்று நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த் கலந்து கொண்டு தொண்டர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

நாளை (28-ந் தேதி) விழுப்புரத்தில் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் ‘உங்களுடன் நான்’ நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில் விஜயகாந்த் கலந்து கொள்கிறார். தொண்டர்களுடன் புகைப்படம் எடுத்துகொள்கிறார்.

Similar News