செய்திகள்

தேர்தலில் சீட் தருவதாக கூறி ரூ. 35 லட்சம் மோசடி: நத்தம் விசுவநாதன் மீது அ.தி.மு.க. நிர்வாகி புகார்

Published On 2017-02-17 09:59 GMT   |   Update On 2017-02-17 09:59 GMT
தேர்தலில் சீட் பெற்று தருவதாக கூறி ரூ. 35 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் மீது, அ.தி.மு.க. நிர்வாகி புகார் கொடுத்துள்ளார்.
காரைக்குடி:

காரைக்குடி கற்பக விநாயகர் நகரைச் சேர்ந்தவர் இருளையா (வயது 45). அ.தி.மு.க.வில் மாவட்ட இலக்கிய அணி செயலாளராக உள்ளார். இவர், காரைக்குடி துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

நான் கடந்த தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட ‘சீட்’ கேட்டேன். இதற்கு அப்போதைய சிவகங்கை மண்டல அ.தி.மு.க. பொறுப்பாளராக இருந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், ரூ. 50 லட்சம் கேட்டார். அவர் கூறியதையடுத்து கடந்த 25.03.2016 அன்று நத்தம் விசுவநாதனின் உதவியாளரிடம் ரூ. 50 லட்சம் கொடுத்தேன்.

ஆனால் அந்த தேர்தலில் எனக்கு ‘சீட்‘ கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து, பணத்தை திருப்பி கேட்டபோது கடந்த டிசம்பர் 5-ந்தேதி, நத்தம் விசுவநாதன் ரூ. 15 லட்சம் கொடுத்தார்.

அதன்பிறகு மீதி பணம் ரூ. 35 லட்சத்தை கேட்டபோது, நான் தற்போது அந்த கட்சியில் இல்லை. இப்போது என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது எனக்கூறி பணத்தை தர மறுக்கிறார். இதனால் நான் மோசடி செய்யப்பட்டதாக உணர்கிறேன். எனவே நத்தம் விசுவநாதனிடம் இருந்து பணத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News