செய்திகள்

திருப்பூர், பல்லடம் தொகுதிகளில் பன்னீர்செல்வத்துக்கு பெருகி வரும் ஆதரவு

Published On 2017-02-13 06:49 GMT   |   Update On 2017-02-13 06:49 GMT
திருப்பூர், பல்லடம் தொகுதிகளில் பன்னீர் செல்வத்துக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
திருப்பூர்:

தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் பிரச்சினையில் அ.தி.மு.க.வினர் இரு அணியாக பிளவுப்பட்டு உள்ளனர். முதல்- அமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு பிரிவாகவும், சசிகலா தலைமையில் ஒரு பிரிவாகவும் இருந்து செயல்பட்டு வருகிறார்கள்.

இதில் பன்னீர்செல்வத்துக்கு இதுவரை 11 எம்.பி.க் கள், 6 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இதேபோல் திருப்பூர் மாவட்டத்திலும் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது.

திருப்பூர் மாநகர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பூலுவப்பட்டி பாலு, எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஆனந்தன், இணை செயலாளர் சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பல்லடம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவம் தலைமையில் ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அ.தி.மு.க. தொண்டர்களும், பொது மக்களும் விரும்பும் பன்னீர் செல்வத்துக்கு மக்கள் பிரதிநிதிகள் (எம்.எல்.ஏ.க்கள்) ஆதரவு தர வேண்டும் என கேட்டு கொண்டனர்.

இதேபோல் தாராபுரம், காங்கயம், உடுமலை உள்ளிட்ட பகுதிகளிலும் பன்னீர் செல்வத்துக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

Similar News