செய்திகள்

அந்தியூர் அருகே வியாபாரியிடம் கத்திமுனையில் ரூ.7 லட்சம் கொள்ளை

Published On 2016-12-27 11:17 GMT   |   Update On 2016-12-27 11:17 GMT
அந்தியூர் அருகே வியாபாரியிடம் கத்திமுனையில் ரூ.7 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சம்பாளையத்தை சேர்ந்தவர் மணிராஜ் (வயது 45).

இவர் தனது வீட்டையொட்டி பேக்கிரி கடை நடத்தி வருகிறார். இவர் ரொட்டி, பண் வகைகளை தயாரித்து (குடிசை தொழில்) அருகில் உள்ள ஊர்களில் உள்ள கடைகளில் போட்டு வந்தார்.

இவரும், இவரது பங்காளிகளும் சேர்ந்து புடவை காளியம்மன் கோவிலை கட்டி வருகிறார்கள். இதற்காக பங்காளிகள் கொடுத்த பணம் ரூ.3 லட்சத்து 60 ஆயிரமும், மேலும் பேக்கரி கடை வருமானம் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் என ரூ. 7 லட்சத்தை மணிராஜ் வீட்டு பீரோவில் வைத்திருந்தார்.

இன்று அதிகாலை 2 மணியளவில் 6 பேர் கொண்ட கும்பல் ஒரு காரில் வந்தது. 6 பேரும் முகத்தை துணியால் மறைத்திருந்தனர். பிறகு அவர்கள் மணிராஜ் வீட்டு கதவை தட்டினர்.

வீட்டு வேலையாட்கள் தான் கதவை தட்டுகிறார்கள் என எண்ணி கதவை திறந்தார். உடனே அந்த கும்பல் அவரை வீட்டுக்குள் தள்ளி கதவை பூட்டினர். ஒருவன் அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினாள்.

பிறகு கொள்ளையர்கள் வீட்டின் பீரோவில் இருந்த ரூ.7 லட்சம் மற்றும் அதில் இருந்த 5 பவுன் நகைகளையும் கொள்ளையடித்தனர்.

அதன்பிறகு வியாபாரி மணிராஜை வீட்டுக்குள் வைத்து விட்டு வெளியே கதவை தாழ்ப்பாள் போட்டு கொண்டு கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர்.

வீட்டுக்குள் வைத்து பூட்டப்பட்ட மணிராஜ் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து அந்தியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் முகமூடி கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News