செய்திகள்
இறந்த சுப்பிரமணி, திம்மக்கா.

கிருஷ்ணகிரி அருகே அண்ணன் தற்கொலை: தங்கை அதிர்ச்சியில் சாவு

Published On 2016-12-19 17:13 IST   |   Update On 2016-12-19 17:13:00 IST
கிருஷ்ணகிரி அருகே வி‌ஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். உடல்நலக்குறைவால் அவருடைய தங்கையும் இறந்தார்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அருகே உள்ள கரடிகுறியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 55). தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (51). சுப்பிரமணியுடன் அவரது தாய் கண்ணம்மாள் (75), தங்கை திம்மக்கா (50) ஆகியோர் வசித்து வந்தனர். திம்மக்கா திருமணம் ஆகி சில ஆண்டுகளில் கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு வந்தார். சுப்பிரமணி, தனது தங்கை மீது பாசமாக இருந்து வந்தார்.

கடந்த சில நாட்களாக கிருஷ்ணகிரி பகுதியில் கடுமையான பனி அடித்ததால் திம்மக்காவின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. குளிர் காய்ச்சலால் அவதிப்பட்ட அவர் நாட்டு மருந்தை சாப்பிட்டு வந்தார். திடீரென்று அவருக்கு வலிப்பு வந்தது. இதையடுத்து அவரை, சுப்பிரமணி மற்றும் உறவினர்கள் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், திம்மக்காவின் மூளையில் ரத்தம் உறைந்து காணப்படுவதாகவும், அதற்காக உடனடியாக ஆபரே‌ஷன் செய்ய வேண்டும் என்றும் கூறினார்கள். இதனால் சுப்பிரமணி மனமுடைந்தார். தொடர்ந்து அவர் தங்கையை எண்ணி, மன வருத்தத்தில் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்தார். ஆபத்தான நிலையில் இருந்த சுப்பிரமணியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதனிடையே திம்மக்கா உடல் நலம் மேலும் மோசமானதால் அவரை உறவினர்கள் வீட்டிற்கு கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த சுப்பிரமணி சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலை உறவினர்கள் வீட்டிற்கு கொண்டு வந்து இறுதி சடங்குகளை செய்ய தயாரானார்கள். அந்த நேரத்தில் ஆபத்தான நிலையில் இருந்த திம்மக்காவும் அண்ணன் இறந்த தகவல் கேட்டு அதிர்ச்சியில் பரிதாபமாக இறந்தார். அண்ணன் - தங்கை 2 பேரும் அடுத்தடுத்து மரணம் அடைந்ததால் உறவினர்கள், குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்.

இதையடுத்து 2 பேருக்கும் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அண்ணன் - தங்கை 2 பேரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டன. இந்த சம்பவத்தால் கரடிகுறி கிராமமே சோகத்தில் மூழ்கியது.

Similar News