செய்திகள்

தஞ்சை அருகே ரூ.34 லட்சம் புதிய ரூபாய் நோட்டு பறிமுதல்

Published On 2016-12-17 06:16 GMT   |   Update On 2016-12-17 06:16 GMT
தஞ்சை அருகே ரூ.34 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் திருச்சி ஓட்டல் அதிபரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு:

தஞ்சையை அடுத்த ஒரத்தநாடு செம்மண்கோட்டை திருவோணம் பிரிவு சாலை அருகே ரகசியமான முறையில் பணபரிமாற்றம் செய்யப்படுவதாக நேற்று இரவு ஒரத்தநாடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு கார் நின்று கொண்டு இருந்தது. காரில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அந்த நேரத்தில் மற்றொரு கார் வேகமாக புறப்பட்டு சென்றது. உடனே போலீசார் அந்த காரை பின்தொடர்ந்தனர். அந்த கார் ஒரத்தநாடு பஸ்நிலையம் அருகே நின்றது. உடனே போலீசார் விரைந்து சென்று அந்த காரில் சோதனை நடத்தினர். அப்போது காருக்குள் பைகளில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரூ.34 லட்சம் இருப்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து காரில் வந்த 5 பேரையும், பணத்துடன், காரையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன் மற்றும் போலீசார், காரில் வந்த 5 பேரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் திருச்சியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்கள் திருச்சியில் ஓட்டல் நடத்தும் ஒருவருக்கு கரம்பியம் பகுதியில் நிலம் வாங்க பணம் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தனர்.

அவர்கள் முன்னுக்குபின் முரணான தகவல்களை கூறியதால் அவர்கள் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் குறிப்பிட்ட திருச்சி ஓட்டல் அதிபரிடம் விசாரணை நடத்துகின்றனர்.

Similar News