செய்திகள்

திம்பம் மலை பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Published On 2016-12-03 12:57 IST   |   Update On 2016-12-03 12:57:00 IST
அதிக பாரம் ஏற்றி வந்த லாரி பழுதாகி நின்றதால் திம்பம் மலை பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தமிழகம் கர்நாடகத்தை இணைக்கும் திம்பம் மலைப்பாதையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகின்றன.

நேற்று மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து மரங்களை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. திம்பம் 23 -வது வளைவில் லாரி திரும்பும்போது அதிகபாரம் காரணமாக லாரி திடீர் என்று பழுதாகி நின்றது.

இதனால் லாரியை நகர்த்தமுடியாமல் அதே இடத்தில் நின்று விட்டது. அப்போது அதிக பாரம் காரணமாக சாய்ந்துவிழும் நிலையில் லாரி இருந்தது

இதனால் லாரியை தாங்கி பிடிக்கும் இரும்புகம்பிகளை வைத்து சாய்ந்துவிடாதபடி தடுத்தனர்.

லாரி பழுது காரணமாக கோவை, சத்தியில் இருந்து மைசூர், பெங்களூரு, கெள்ளேகால் செல்லும் சரக்கு வாகனங்கள், பஸ்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பண்ணாரியில் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் இரு மாநிலங்களிடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து பண்ணாரி சோதனைச்சாவடிக்கு தககவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு வாகனம் பழுதாகி நின்ற சரக்கு லாரியை சற்று நகர்த்தி சிறிது இடைவெளி ஏற்படுத்தியது.

அதில் சிறிய வாகனங்கள் மட்டுமே செல்லும் வழித்தடமாக இருந்ததால் கார், வேன் வாகனங்கள் போன்றவை செல்ல அனுமதிக்கப்பட்டன. பஸ்கள் தொடர்ந்து பண்ணாரியில் தடுத்து நிறுத்தப்பட்டன.

இதற்கிடையே, பழுதாகி நின்ற லாரியில் இருந்த மரங்களை வேறொரு லாரியில் ஏற்றினர். சரக்கு பாரம் குறைந்ததால் லாரியில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டது. சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு இரு மாநிலங்களிடையே போக்குவரத்து மீண்டும் துவங்கியது.

16 டன்னுக்கு மேல் பாரம் ஏற்றி வரும் சரக்கு வாகனங்கள் திம்பம் மலைப்பாதையில் அனுமதிப்பதில்லை. தற்போது அதிக பாரம் காரணமாக சரக்கு லாரி பழுதாகி நின்றதால் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News