செய்திகள்

பவானிசாகர் நீர்மட்டம் 45 அடியில் நீடிப்பு: நடா புயல் மழை பெய்து தண்ணீர் வரத்தை அதிகரிக்குமா?

Published On 2016-12-01 17:50 IST   |   Update On 2016-12-01 17:50:00 IST
வங்க கடலில் மையம் கொண்டுள்ள நடா புயல் நாளை கரையை கடக்கும் என்று வானிலை அறிவித்துள்ளளது. இதனால் நடா புயல் மூலமாவது பவானிசாகர் அணைக்கு தண்ணீர்வரத்து அதிகரிக்குமா? என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
ஈரோடு:

கடந்த பல நாட்களாக பவானிசாகர் அணைக்கு குறைந்த அளவே நீர் வந்து கொண்டிருக்கிறது. தென்மேற்கு பருவ மழை பொய்யதாலும், வட கிழக்கு பருவ மழை பொய்ததாலும் அணைக்கு எதிர்பார்த்த அளவு நீர்வரவில்லை.

இதனால் இதையே நம்பி இருந்த காளிங்கராயன் பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளளனர். பவானிசாகர் அணையை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கரில் மஞ்சள் பயிரிட்டிருந்தனர்.

விவசாயிகள் கோரிக்கையை ஏற்று பவானிசாகர் அணையில் இருந்து உயிர் நீர் திறக்கப்பட்டது. எனினும் நீர் வரத்து குறைந்ததால் உயிர் நீர் நிறுத்தப்பட்டது.

இதனால் விவசாய அமைப்புகள் பவானிசாகர் அணையில் இருந்து உடனடியாக உயிர் நீர் திறக்க வேண்டும் என்று தொடர் போராட்டம் நடத்தினர்.

கடந்த ஆண்டு இதே நாளில் பவானிசாகர் அணை 75 அடியாக இருந்தது. ஆனால் இன்று காலை 10 மணி நிலவரபடி அணையின் நீர்மட்டம் 45.17 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக காவிரி ஆற்றுக்கு 150 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடிநீரும் திறந்துவிடப்படுகிறது.

இந்நிலையில் வங்க கடலில் மையம் கொண்டுள்ள ’நடா‘ நாளை காலை கரையை கடக்கும் என்றும், இதனால் தமிழ்நாடு முழவதும் ஒரு சில இடங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளளது.

இதனால் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அவ்வாறு மழை பெய்தால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நடா புயல் மூலமாவது தாங்களுக்கு வருணபகவான் கருணை காட்டமாட்டாரா? என்று விவசாயிகளும், பொது மக்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Similar News