செய்திகள்

சத்தியமங்கலம் வனப்பகுதி பனி மூட்டத்தால் மூடியது

Published On 2016-11-30 16:43 IST   |   Update On 2016-11-30 16:43:00 IST
ஈரோடு மாவட்ட வனப் பகுதியான சத்தியமங்கலம் பனிமூட்டத்தால் வனப் பகுதியே தெரியாத அளவு மூடப்பட்டு கிடக்கிறது. பகல்-இரவு என தொடர்ந்து வெண்புகை மண்டலமாக வனப்பகுதி நிரம்பி உள்ளது.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் முழுவதும் தற்போது கடும் பனிப்பொழிவு உள்ளது. அதிகாலை 4 மணிக்கு பனிகொட்டத் தொடங்கி 9 மணி வரை அதன் தாக்கம் உள்ளது. இதனால் கடும் குளிர் நிலவுகிறது.

ஈரோடு மாவட்ட வனப் பகுதியான சத்தியமங்கலம் பனிமூட்டத்தால் வனப் பகுதியே தெரியாத அளவு மூடப்பட்டு கிடக்கிறது. பகல்-இரவு என தொடர்ந்து வெண்புகை மண்டலமாக வனப்பகுதி நிரம்பி உள்ளது.

இதையொட்டி போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக காலை மற்றும் இரவு நேரத்தில் வாகனங்களில் செல்ல முடியவில்லை.

தமிழ்நாடு-கர்நாடகா மாநிலத்தை இணைக்கும் இந்த மலைப்பாதையில் தொடர்ந்து நிலவும் பனி மூட்டத்தால் வாகனங்கள் தட்டுதடுமாறி ஊர்ந்தபடியே செல்கிறது.

முகப்பு விளக்குகளை போட்டுச்சென்றாலும் ஒரே புகையாகத்தான் தெரிகிறதே தவிர ரோட்டை பார்க்க முடியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறுகிறார்கள்.

இதனால் குறிப்பிட்ட நேரத்துக்கு வரும் தமிழக மற்றும் கர்நாடக மாநில பஸ்கள் 30 நிமிடம், 40 நிமிடம் என தாமதமாகவே வருகிறது. இந்த பனி மூட்டம், திம்பம், மாவநத்தம், ஆசனூர், கேர்மாளத்தில் அதிகமாக உள்ளது. அப்பகுதி மக்கள் கடும் குளிரால் அவதிப்பட்டு வருகிறார்கள். குளிரில் இருந்து ஓரளவு தப்பிக்க நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள்.

Similar News