செய்திகள்

நீர்பிடிப்பு பகுதியில் மழை: பவானிசாகர் அணை ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்தது

Published On 2016-11-17 16:50 IST   |   Update On 2016-11-17 16:50:00 IST
நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்துள்ளது.
ஈரோடு:

ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் மிகவும் குறைந்த நிலையில் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 70 அடிக்கும் மேல் உள்ள அணையின் நீர்மட்டம் நேற்று 44 அடியாக இருந்தது.

இந்த நிலையில் நேற்று ஊட்டி மலையில் உள்ள பில்லூர் அணையிலிருந்து மின்சாரம் தயாரிக்க தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் 300 கனஅடி வீதம் வந்த தண்ணீர் 770 கன அடியாக அதிகரித்தது.

இதற்கிடையே நேற்று நீர்பிடிப்பு பகுதியில் நேற்று முதல் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்து உள்ளது. இன்று காலை 9 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1635 கனஅடி வீதம் தண்ணீர் பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது.

மேலும் நேற்று அணையின் நீர்மட்டம் 44.10 அடியாக இருந்தது. இன்று காலை 9 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 45.10 அடியாக இருந்தது. அணையில் ஒரே நாளில் 1 அடி உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து கூடி இருப்பதால் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அணையிலிருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு வினாடிக்கு 205 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

Similar News