செய்திகள்

30 நாட்களாக 53 அடியிலேயே இருக்கும் பவானிசாகர் அணை நீர்மட்டம் - விவசாயிகள் கவலை

Published On 2016-10-25 11:36 GMT   |   Update On 2016-10-25 11:36 GMT
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயராமல் தொடர்ந்து 53 அடியாகவே உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
ஈரோடு:

போதிய மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து மிகவும் குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாகவே அணையின் நீர்மட்டம் மிகவும் குறைந்து காணப்படுகிறது.

வழக்கமாக ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும். அணையின் நிலைமை கருதி இந்த ஆண்டு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.

இந்த நிலையில் கருகும் பயிர்களை காப்பாற்ற தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக அணையில் இருந்து 2300 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கடந்த மாதம் 25-ந்தேதி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக இருந்தது. இதன்பிறகும் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் தொடர்ந்து 53 அடியாகவே நீர்மட்டம் உள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 53. 42 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 383 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 2450 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

அணையின் நீர்மட்டம் உயராமல் தொடர்ந்து 53 அடியாகவே உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை வருகிற 27-ந்தேதி தொடங்கும் என்று வானிலை இலாகா அறிவித்து உள்ளது. இந்த வடகிழக்கு பருவ மழையாவது போதிய அளவில் பெய்து பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகமாகி நீர்மட்டம் உயரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.

Similar News