செய்திகள்

கடலூரில் தொடர்ந்து கடல் சீற்றம்: மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை

Published On 2016-10-23 16:28 IST   |   Update On 2016-10-23 16:28:00 IST
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளதால் கடலூரில் தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.

கடலூர்:

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் சில பகுதிகளில் மழைபெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடற்கரையில் நேற்று முன்தினம் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. கடலூர் துறைமுகத்திலும் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கடலூரில் நேற்று கடல் மிக சீற்றத்துடன் காணப்பட்டது. அதிக உயரத்துக்கு அலைகள் எழுந்தன. கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசியது. இதனால் கடலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க செல்லவில்லை. இன்றும் தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

எனவே மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை. கடலூர் துறைமுகம், தேவனாம்பட்டினம், நல்லவாடு, ராசாபேட்டை, கிள்ளை, பரங்கிபேட்டை, அக்கரகோரி ஆகிய பகுதிகளில் மீனவர்கள் கடற்கரை ஓரத்தில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி உள்ளனர்.

மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் கடற்கரை ஓரங்களில் 6 ஆயிரம் படகுகள் ஓய்வெடுக்கின்றன. கடலூரில் குளத்து மீன்கள் விற்பனை அமோகமாக உள்ளது. அதிக விலைக்கு இந்த மீன்கள் விற்கப்பட்டன.

Similar News