செய்திகள்
கொள்ளை சம்பவம் நடந்த விவசாயி முத்துசாமி வீட்டை படத்தில் காணலாம்.

அரியலூர் அருகே விவசாயி வீட்டில் 35 பவுன் கொள்ளை: போலீசார் விசாரணை

Published On 2016-10-05 09:44 IST   |   Update On 2016-10-05 09:44:00 IST
அரியலூர் அருகே விவசாயி வீட்டில் 35 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர்:

அரியலூர் அருகே உள்ள வெங்கடகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 68), விவசாயி. இவரது மனைவி அழகம்மாள் (60). இவர்களுக்கு சின்னராசு, சுரேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் சின்னராசு சிங்கப்பூரிலும், சுரேஷ் பெங்களூரிலும் வேலை பார்த்து வருகின்றனர்.

நேற்றிரவு முத்துசாமியும், அவரது மனைவியும் வீட்டின் கதவுகளை அடைத்துக்கொண்டு உள்ளே அயர்ந்து தூங்கினர். இந்த நிலையில் நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர்.

பின்னர் தனி அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 35 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர். அவற்றின் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும்.

இன்று காலை முத்துசாமி எழுந்து பார்த்த போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததையும், பீரோ திறந்து கிடப்பதையும், அதில் இருந்த 35 பவுன் நகை கொள்ளை போயிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து உடனடியாக கயர்லாபாத் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் மூலம் சோதனை நடத்தப்பட்டது. கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூரில் உரக்கடை அதிபர் வீட்டிற்குள் புகுந்து அவரை சரமாரி தாக்கி நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந் நிலையில் விவசாயி வீட்டில் 35 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். தொடர்ச்சியாக நடந்து வரும் இந்த சம்பவங்களால் அரியலூர் பகுதி பொதுமக்கள் பீதிக்கு ஆளாகியுள்ளனர்.

Similar News