செய்திகள்

புதுக்கோட்டை அருகே 2 மாத குழந்தை கிணற்றில் வீசி கொலை: தாய் தற்கொலை முயற்சி

Published On 2016-09-17 14:35 GMT   |   Update On 2016-09-17 14:35 GMT
புதுக்கோட்டை அருகே 2 மாத குழந்தையை கிணற்றில் வீசிக்கொன்று, தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 28). லோடு ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சந்திரலேகா (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 1½ வருடம் ஆகிறது. பிறந்து 2மாதமே ஆன நிலையில் வைணேஸ்வரி என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் தங்கராஜூக்கு குடிபழக்கம் இருந்து வந்தது . தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வருவார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.நேற்றிரவும் தகராறு ஏற்பட்டது.

இதில் மனமுடைந்த சந்திரலேகா இன்று அதிகாலை , திடீரென வீட்டின் பின்புறமுள்ள கிணற்றில் தனது குழந்தையை தூக்கிவீசினார். பின்னர் அவரும் கிணற்றில் குதித்து விட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் கிணற்றில் தத்தளித்த சந்திரலேகாவை மீட்டு, புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். குழந்தை வைணேஸ்வரி கிணற்றில் மூழ்கி இறந்தது.

இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற ஆலங்குடி போலீசார் , குழந்தை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையை கிணற்றில் தள்ளிக்கொன்று தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News