செய்திகள்

சேதப்படுத்தப்பட்ட தமிழர்களின் வாகனங்களுக்கு கர்நாடகா நஷ்டஈடு வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன் பேச்சு

Published On 2016-09-17 12:30 GMT   |   Update On 2016-09-17 12:30 GMT
கர்நாடகாவில் தமிழர்களின் பொருட்கள் மற்றும் வாகனங்கள் சேதப்படுத்தபட்டுள்ளன. அதற்கான நஷ்டஈடு தொகையை கர்நாடகா அரசு வழங்க வேண்டும் என ஜி.கே. வாசன் கூறினார்.

தஞ்சாவூர்:

தமிழகத்திற்குரிய தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், தண்ணீரை பெற்றுதர நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசை கண்டித்தும் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு த.மா.கா. சார்பில் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவர் பேசுகையில் கூறியதாவது:-

தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி கட்சி தலைவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து பின்னர் அனைத்து கட்சி குழுவை பிரதமரிடம் அழைத்து சென்று டெல்டாவின் உண்மை நிலவரத்தை தெரிவித்து காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகாவில் தமிழர்களின் பொருட்கள் மற்றும் வாகனங்கள் சேதப்படுத்தபட்டுள்ளன. அதற்கான நஷ்டஈடு தொகையை கர்நாடகா அரசு வழங்க வேண்டும். கர்நாடகா அரசிடமிருந்து அதனை பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்குவதில் பாகுபாடு இருக்கக்கூடாது. ஆனால், இடுபொருட்கள் வழங்குவதில் அரசியல் குறுக்கீடு உள்ளது. இதில் தமிழக அரசு தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடுவர் மன்ற இறுதி தீர்ப்பினை மதித்து நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். காவிரி பிரச்சினையில் மன்னார்குடியை சேர்ந்த இளைஞர் தீக்குளித்துள்ளார். இதுபோன்ற செயல்களில் இனி யாரும் ஈடுபடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News