செய்திகள்

மேல்மலையனூர் அருகே கள்ளக்காதல் ஜோடி வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2016-08-19 12:41 GMT   |   Update On 2016-08-19 12:41 GMT
மேல்மலையனூர் அருகே கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேல்மலையனூர்:

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள கெங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 38) விவசாயி. திருமணம் ஆனவர். இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ராஜசேகரின் என்பவரின் மனைவி மகேஸ்வரி(35) என்பவருக்குமிடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.

இதையறிந்த அவர்களது உறவினர்கள் இருவரையும் கண்டித்தனர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து பழகி வந்தனர். கள்ளக்காதலுக்கு உறவினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் ராஜேந்திரனும், மகேஷ்வரியும் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

நேற்று இரவு ராஜேந்திரனும், மகேஷ்வரியும் அந்த பகுதியில் உள்ள வயல் வெளிக்குச் சென்றனர். அங்கு அவர்கள் வி‌ஷம் குடித்தனர். சிறிது நேரத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.

இன்று காலை அந்தபகுதி வழியாக சென்ற பொதுமக்கள் ராஜேந்திரனும், மகேஷ்வரியும் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பாக வலத்தி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர்கள் சரஸ்வதி, விஸ்வநாதன் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடல்களை மீட்டனர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட ராஜேந்திரனுக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதேபோல் மகேஷ்வரிக்கு 2 பெண்குழந்தைகளும், ஒருமகனும் உள்ளனர்.

கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News