செய்திகள்
தற்கொலை செய்து கொண்ட என்.எல்.சி. அதிகாரி கோவிந்தராஜ்

நெய்வேலி என்.எல்.சி. அதிகாரி தற்கொலை செய்தது ஏன்?: போலீசார் விசாரணை

Published On 2016-06-21 10:58 IST   |   Update On 2016-06-21 10:58:00 IST
என்.எல்.சி அதிகாரி தற்கொலை செய்து கொண்டது குறித்து நெய்வேலி டவுன் ஷிப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
நெய்வேலி:

நெய்வேலியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 56). என்.எல்.சி.யில் கூடுதல் துணை பொது மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு வாணி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

நேற்று முன்தினம் விடுமுறை நாளில் கோவிந்த ராஜ் அலுவலகத்துக்கு சென்றார்.

பின்னர் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரது மனைவி வாணி அதிர்ச்சி அடைந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து நெய்வேலி டவுன் ஷிப் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கோவிந்தராஜை தேடிவந்தனர்.

இந்த நிலையில் நெய்வேலி வட்டம் 7-ல் உள்ள வடிகால் ஓடை அருகே கோவிந்தராஜ் பிணமாக கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

பிணத்தின் அருகே வி‌ஷ பாட்டில் கிடந்தது. போலீசார் விரைந்து வந்து அவரது பிணத்தை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலின் அருகே கிடந்த வி‌ஷப்பாட்டிலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

அப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகின. கோவிந்தராஜ் நேற்று முன்தினம் மாலை தனது அலுவலகத்தில் செல்போனை வைத்து விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் நெய்வேலி பஸ் நிலையத்துக்கு வந்துள்ளார். அங்குள்ள இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.

பின்னர் ஓடை பகுதிக்கு சென்று வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.

கோவிந்தராஜுக்கு கடந்த சில நாட்களாக வேலைபளு அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

எனவே பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமா? அல்லது குடும்ப பிரச்சனையா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News