தமிழ்நாடு

தருமபுரியில் தேர்தல் பறக்கும் படை வாகன தணிக்கையில் ரூ.18 லட்சம் பறிமுதல்

Published On 2024-03-21 10:06 GMT   |   Update On 2024-03-21 10:06 GMT
  • தருமபுரி ஆர்.டி.ஓ., காயத்திரி பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை சரிபார்த்து, தருமபுரி வருமான வரித்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தார்.
  • உரிய ஆவணமின்றி ரூ.6 லட்சத்து 54 ஆயிரத்து 505 பணத்தை எடுத்துச் செல்வது தெரியவந்தது.

தருமபுரி:

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இந்த நிலையில், தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள வரை, உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்து செல்லவதை தடுக்க, தருமபுரி மாவட்டத்தில், 10 சோதனை சாவடிகள், 45 பறக்கும் படை குழுவினர், 45 நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.

இதையடுத்து, பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து நல்லம்பள்ளி அடுத்த சேசம்பட்டி கூட்டு ரோடு அருகே ஜெயக்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, தருமபுரி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில், 11.58 லட்சம் ரூபாய் இருந்தது கண்டு பிடிக்கபட்டது. இதையடுத்து, பறக்கும் படையினர் காரில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, தருமபுரி மாவட்டம், லளிகத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் மோகன், 29 என்பவர், தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பணத்தை தருமபுரிக்கு கொண்டு வந்தது தெரியவந்தது.

பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததை அடுத்து கைப்பற்றிய பணத்தை, பறக்கும் படை யினர், தருமபுரி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் ஜெய செல்வத்திடம் ஒப்படைத்தனர்.

தருமபுரி ஆர்.டி.ஓ., காயத்திரி பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை சரிபார்த்து, தருமபுரி வருமான வரித்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தார்.

பணத்துக்கான உரிய ரசீதை ஒப்படைத்து, வருமான வரித்துறையினரிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என, வருவாய்த்துறையினர் பணத்தை எடுத்து வந்த மோகனிடம் தெரிவித்தனர். இதே போன்று தொப்பூரில் உரிய அனுமதியின்றி எடுத்து வரப்பட்ட, ரூ.69 ஆயிரம் பணத்தை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி அருகே பறக்கும் படையினர் சேலத்தில் இருந்து அரூர் நோக்கி வந்த போர்ஸ் டிராவலர்ஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் உரிய ஆவணமின்றி ரூ.6 லட்சத்து 54 ஆயிரத்து 505 பணத்தை எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதனை அடுத்து பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்.

அதில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த ராஜி கவுண்டர் என்பவருக்கு சொந்தமான மாதா மலர் பீடி நிறுவனத்தின் மூலம் தயாரித்த புகையிலை வியாபார பொருட்களை ஜோலார்பேட்டை முதல் சேலம் வரை உள்ள கடைகளுக்கு விற்பனை செய்யும் விற்பனையாளராக இருந்து வருவதாகவும், விற்பனை செய்த பணத்தை எடுத்துக்கொண்டு சேலத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார்.

அதற்கான உரிய ஆவணம் இல்லாததால் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம் அவரிடமிருந்து மேற்கண்ட தொகை பறிமுதல் செய்யப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது,

Tags:    

Similar News