தமிழ்நாடு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 800 கனஅடியாக சரிவு

Published On 2024-03-15 07:54 GMT   |   Update On 2024-03-15 07:54 GMT
  • கர்நாடகா மற்றும் தமிழக எல்லை பகுதிகளில் மழை அளவு குறைந்ததால், காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைய தொடங்கியது.
  • குறைந்த அளவில் நீர்வரத்து இருந்தபோதிலும் ஒகேனக்கல்லில் ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

ஒகேனக்கல்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் இன்று காலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 800 கனஅடியாக உள்ளது.

கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால், கடந்த 3 நாட்களாக தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 2500 கனஅடியாக அதிகரிக்க தொடங்கியது.

தற்போது கர்நாடகா மற்றும் தமிழக எல்லை பகுதிகளில் மழை அளவு குறைந்ததால், காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைய தொடங்கியது.

இந்த நீர்வரத்தானது படிப்படியாக குறைந்து இன்று அதிகாலை வினாடிக்கு 1200 கன அடியாக இருந்த நிலையில் காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து மேலும் சரிந்து வினாடிக்கு 800 கன அடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது. குறைந்த அளவில் நீர்வரத்து இருந்தபோதிலும் ஒகேனக்கல்லில் ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

தருமபுரி மாவட்டத்தில் கோடை காலத்திற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வெப்பத்தை தணிக்கவும், தற்போது நீர்வரத்து ஓரளவிற்கு வந்து கொண்டிருப்பதாலும், அருவிகளில் தண்ணீர் சீராக செல்வதாலும் ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News