விளையாட்டு

இந்திய மல்யுத்த சம்மேளனம் மீதான இடைநீக்கம் ரத்து

Published On 2024-02-14 05:03 GMT   |   Update On 2024-02-14 05:03 GMT
  • கடந்த ஆண்டு ஆகஸ்டு 23-ந்தேதி இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்தது.
  • இந்திய மல்யுத்த சம்மேளம் மீதான இடைநீக்க நடவடிக்கையை உலக மல்யுத்த சங்கம் நேற்று தளர்த்தியது.

புதுடெல்லி:

இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தலை குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தாமல் பலமுறை தள்ளிவைக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த உலக மல்யுத்த சங்கம், கடந்த ஆண்டு ஆகஸ்டு 23-ந்தேதி இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்தது.

இதற்கிடையே, பல்வேறு சலசலப்புக்கு மத்தியில் இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் நடந்தது. புதிய தலைவராக சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு மல்யுத்த வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் அவர் விதிமுறைக்கு புறம்பாக தேசிய போட்டிகளை நடத்த முயற்சித்ததால் உடனடியாக புதிய நிர்வாகத்தை மத்திய விளையாட்டு அமைச்சம் இடைநீக்கம் செய்தது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நியமிக்கப்பட்ட தற்காலிக கமிட்டி மல்யுத்த பணிகளை கவனிக்கிறது. ஆனாலும் புதிய நிர்வாகம், விளையாட்டு அமைச்சகத்தின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் இந்திய மல்யுத்த சம்மேளம் மீதான இடைநீக்க நடவடிக்கையை உலக மல்யுத்த சங்கம் நேற்று தளர்த்தியது. அதே சமயம் முன்னாள் மல்யுத்த சம்மேளன தலைவருக்கு எதிராக பல மாதங்கள் போராடிய பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் போன்ற வீரர், வீராங்கனைகளை சர்வதேச போட்டிக்கு பரிசீலனை செய்யும் போது எந்தவித பாகுபாடும் காட்டமாட்டோம் என்று இந்திய மல்யுத்த சம்மேளனம் எழுத்துபூர்வமாக உத்தரவாதம் தர வேண்டும் என்றும் உலக சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

Similar News