விளையாட்டு

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி 5-வது தோல்வி

Published On 2023-12-26 04:52 GMT   |   Update On 2023-12-26 04:52 GMT
  • மொத்தத்தில் 7-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் 2 வெற்றி, 5 தோல்வி என 11 புள்ளிகளுடன் 11-வது இடத்தில் இருக்கிறது.
  • நாளையுடன் சென்னையில் நடைபெறும் லீக் சுற்று நிறைவடைகிறது.

சென்னை:

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது புரோ கபடி லீக் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய 41-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, அரியானா ஸ்டீலர்சை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த மோதலில் தொடக்கம் முதலே அதிக்கம் செலுத்திய அரியானா, தலைவாஸ் அணியை ஒரு முறை 'ஆல்-அவுட்' செய்ததுடன் முதல் பாதியில் 18-12 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தது.

பிற்பாதியிலும் அரியானா வீரர்கள் மளமளவென புள்ளிகளை எடுத்தனர். குறிப்பாக சூப்பர் டேக்கிள்ஸ் யுக்தியில் அருமையாக செயல்பட்டு தலைவாஸ் அணியை தத்தளிக்க வைத்தனர். இந்த வகையில் மடக்கி பிடித்ததில் மட்டும் 13 புள்ளிகள் திரட்டினர்.

முடிவில் அரியானா அணி 42-29 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாசை வீழ்த்தியது. அதிகப்பட்சமாக தலைவாஸ் அணியில் சாஹில் குலியா 10 புள்ளியும், அரியானா தரப்பில் சிவம் படரே 8 புள்ளியும் எடுத்தனர்.

இதுவரை உள்ளுரில் நடந்த மூன்று ஆட்டத்திலும் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியை சந்தித்து இருப்பது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் 7-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் 2 வெற்றி, 5 தோல்வி என 11 புள்ளிகளுடன் 11-வது இடத்தில் இருக்கிறது. அரியானா 5 வெற்றி, 2 தோல்வி என 26 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி 38-29 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்தது. டெல்லி கேப்டன் நவீன்குமார் 11 புள்ளி எடுத்து தங்கள் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இன்றைய லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன்-பாட்னா பைரட்ஸ் (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன. நாளையுடன் சென்னையில் நடைபெறும் லீக் சுற்று நிறைவடைகிறது.

Tags:    

Similar News