காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்ற இந்திய அணியினருக்கு பிரதமர் பாராட்டு
- சர்வதேச அரங்கில் மிகச் சிறப்பாக இந்திய வீரர்கள் செயல்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
- விளையாட்டுக்களில் வெற்றிக்கான புதிய வழிமுறையை இந்தியா கண்டறிந்துள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்ற இந்திய அணியினர், பிரதமர் மோடியை இன்று சந்தித்தனர். அவரை வரவேற்ற பிரதமர், காமன்வெல்த் விளையாட்டில் இந்திய வீரர், வீராங்கணைகளின் சாதனைகள் மிகுந்த பெருமிதம் அளிப்பதாக தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நீங்கள் அனைவரும் பர்மிங்ஹம் போட்டியில் பங்கேற்றிருந்தபோது, இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கானோர் நள்ளிரவிலும் கண் விழித்திருந்து, உங்களது ஒவ்வொரு செயல்பாட்டையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்திய அணியினரை வழியனுப்பியபோது தாம் வாக்குறுதி அளித்தபடி, இன்றைய தினம் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi interacted with the Indian contingent that participated in #CWG22, today. Union Sports Minister Anurag Thakur and MoS Sports Nisith Pramanik were also present at the occasion. #CommonwealthGames2022
— ANI (@ANI) August 13, 2022
(Source: PMO) pic.twitter.com/IpP9N9NaHJ
பல போட்டிகளில் நூல்இழையில் பதக்க வாய்ப்பை நழுவ விட்டோம். பதக்க எண்ணிக்கை என்பது செயல் திறனை முழுமையாக பிரதிபலிக்காது. முந்தைய போட்டியுடன் ஒப்பிடுகையில், 4 புதிய விளையாட்டுகளில், வெற்றிக்கான புதிய வழிமுறையை இந்தியா கண்டறிந்துள்ளது.
லான் பவுல் முதல் தடகளம் வரை, நமது வீரர்கள் அற்புதமாக விளையாடியுள்ளனர். இந்த செயல்பாடு மூலம், இதுபோன்ற புதிய விளையாட்டுக்களில் ஈடுபாடு காட்டும் சூழல், இந்தியாவில் பெருமளவு அதிகரிக்கும்.
குத்துச்சண்டை, ஜுடோ, மல்யுத்தப் போட்டிகளில் முதன்முறையாக களமிறங்கிய வீரர்கள் 31 பதக்கங்களை வென்றிருப்பது, இளைஞர்களிடையே நம்பிக்கை அதிகரித்து வருவதைப் பிரதிபலிக்கிறது.
ஒன்றுபட்ட பாரதம் உன்னத பாரதம் என்பதற்கு நமது விளையாட்டு வீரர்கள் வலிமையூட்டியுள்ளனர். விளையாட்டு மட்டுமின்றி பிற துறைகளிலும் சாதனை படைக்க வேண்டுமென்ற உணர்வை, இந்திய இளைஞர்களிடையே விளையாட்டு வீரர்கள் ஏற்படுத்தி இருக்கின்றனர்.
கேலோ இந்தியா விளையாட்டு மூலம் தங்களது திறமையை வெளிப்படுத்திய வீரர்கள், தற்போது சர்வதேச அரங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
புதிய திறமைசாலிகளை அடையாளங்கண்டு, அவர்கள் பதக்கம் வெல்வதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
உலகிலேயே மிகச்சிறந்த, அனைத்தையும் உள்ளடக்கிய, பன்முகத்தன்மை மற்றும் ஆற்றல்மிக்க விளையாட்டுச் சூழலை உருவாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. திறமையுள்ள யாரையும் விட்டுவிடக் கூடாது.
அடுத்து வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் ஒலிம்பிக் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வீரர்கள் ஆயத்தமாக வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.