விளையாட்டு

காமன்வெல்த் ஈட்டி எறிதல் போட்டியில் முதல் பதக்கம்- அசத்திய அன்னு ராணி

Published On 2022-08-07 12:09 GMT   |   Update On 2022-08-07 12:09 GMT
  • அன்னு ராணி 4வது வாய்ப்பில் 60 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து 3வது இடத்தை பிடித்தார்.
  • ஆஸ்திரேலியாவின் கெல்சி-லீ பார்பர், 64.43 மீட்டர் இலக்கை எட்டி தங்கம் வென்றார்.

பர்மிங்காம்:

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இதில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. இன்று குத்துச்சண்டை பிரிவில் 2 தங்கம், மும்முறை தாண்டுதல் போட்டியில் தங்கம், வெள்ளி என இந்திய வீரர்கள் பதக்கங்கள் வென்றனர்.

இந்நிலையில், ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை அன்னு ராணி வெண்கலப் பதக்கம் வென்றார். 4வது வாய்ப்பில் அவர் தனது அதிகபட்ச தூரமான 60 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து 3வது இடத்தை பிடித்தார். இதன்மூலம் காமன்வெல்த் ஈட்டி எறிதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அன்னு ராணி பெற்றுள்ளார்.

உலக சாம்பியன் கெல்சி-லீ பார்பர் (ஆஸ்திரேலியா), 64.43 மீட்டர் இலக்கை எட்டி தங்கம் வென்றார். அதே நாட்டின் மற்றொரு வீராங்கனை மெக்கென்சி லிட்டில் (64.27 மீ) வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதேபோல் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் வேகநடை போட்டியில் இந்திய வீரர் சந்தீப் குமார் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் இந்தியா 16 தங்கம், 12 வெள்ளி, 19 வெண்கலம் என 47 பதக்கங்களைப் பெற்று பதக்க பட்டியலில் ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறது.

Tags:    

Similar News