சிக்சர் சஞ்சு... ஒரு உலகக் கோப்பை தொடரில் பல சாதனைகளை படைத்த ஒரே வீரர்
- சாம்சன் 5 ஆட்டத்தில் 24 சிக்சர்கள் அடித்தார்.
- 20 ஓவர் உலகக் கோப்பையில் தொடர்ந்து 3 ஆட்டங்களில் 80 ரன்களுக்கு மேல் எடுத்த 2-வது வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
சஞ்சு சாம்சனுக்கு மறக்க முடியாத உலக கோப்பை இதுவாகும். உலக கோப்பையை வெல்ல அவரது அதிரடியான ஆட்டம் முக்கிய பங்கு வகித்தது.
அவர் 5 ஆட்டத்தில் 321 ரன் குவித்துள்ளார். இதில் 3 அரை சதம் அடங்கும். சராசரி 80.25 ஆகும். ஸ்டிரைக் ரேட் 199.37 ஆகும். இதனால் தொடர் நாயகன் விருது சஞ்சு சாம்சனுக்கு கிடைத்தது.
இந்த தொடரில் சஞ்சு சாம்சன் பல சாதனைகளை புரிந்துள்ளார். 321 ரன் குவித்தது மூலம் ஒரு உலகக் கோப்பையின் அதிக ரன் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு விராட் கோலி 319 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது. சாம்சன் இந்த தொடரில் ரன் குவிப்பில் 3-வது இடத்தை பிடித்தார்.
சாம்சன் 5 ஆட்டத்தில் 24 சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் ஒரு உலகக் கோப்பையில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதே தொடரில் 20 சிக்சர் அடித்த பின்ஆலன் (நியூசிலாந்து) 2-வது இடத்தில் உள்ளார்.
மேலும் சஞ்சு சாம்சன் 20 ஓவர் உலகக் கோப்பையில் தொடர்ந்து 3 ஆட்டங்களில் (97 ரன், 89 ரன். 89 ரன்) 80 ரன்களுக்கு மேல் எடுத்த 2-வது வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். ஏற்கனவே இலங்கையின் மஹேலா ஜெய வர்த்தனே 2010-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இச்சாதனையை செய்துள்ளார்.
89 ரன்கள் விளாசிய சாம்சன் 20 ஓவர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த வீரராக திகழ்கிறார்.
நடப்பு உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன் மொத்தம் 24 சிக்சர் (5 ஆட்டம்) விளாசி சிக்சர் மன்னனாக வலம் வருகிறார். ஒரு உலகக் கோப்பையில் அதிக சிக்சர் அடித்த வீரர் இவர் தான்.