கிரிக்கெட் (Cricket)

முத்தரப்பு டி20 தொடர்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான்

Published On 2025-09-05 14:02 IST   |   Update On 2025-09-05 14:02:00 IST
  • முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 171 ரன்கள் எடுத்தது.
  • அடுத்து ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 140 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

துபாய்:

ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் பொருட்டு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) அணிகள் இடையே முத்தரப்பு டி20 தொடர் நடைபெறுகிறது.

ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் இரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

பாகிஸ்தான் இரு வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில், நேற்று நடந்த 5வது லீக் போட்டியில் பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் பகர் சமான் அதிரடியாக ஆடி 44 பந்தில் 77 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரகம் 140 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அலிஷான் ஷராபு தனியாக போராடினார். அதிரடியாக ஆடிய அவர் 51 பந்தில் 4 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 68 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் சார்பில் அப்ரார் அகமது 4 விக்கெட் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிபட்டியலில் முதல் இடம் பெற்ற பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தான் ஆடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்த ஐக்கிய அரபு அமீரகம் தொடரில் இருந்து வெளியேறியது.

நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதுகிறது.

Tags:    

Similar News