வயதை பார்க்காதீங்க: நோக்கம் மற்றும் அனுபவத்தை பாருங்க- தேர்வாளர்களுக்கு ரகானே அட்வைஸ்
- ரகானே இந்திய அணிக்காக கடைசியாக 2023ல் விளையாடினார்.
- உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய போதிலும், இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்திய அணியின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளங்கிய ரகானே, மீண்டும் அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். உள்ளூர் பேட்டிகளில் சிறப்பாக விளையாடிய போதிலும், தேர்வாளர்கள் அவரை பரிசீலனை செய்யாமல் புறக்கணிக்கின்றனர்.
37 வயதாகும் ரகானே, ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். அவர் சத்தீஸ்கர் அணிக்கெதிராக 159 ரன்கள் விளாசினார்.
இந்த நிலையில், 2024-25 தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 1-3 என படுதோல்வியடைந்தது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு நான் தேவை என உணர்ந்ததாக ரகானே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரகானே கூறியதாவது:-
வயது வெறும் நம்பர்தான். ஒரு வீரராக உங்களுக்கு அனுபவம் இருந்தால், இன்னும் உள்ளூர் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தால், உங்களுடைய சிறந்த ஆட்டத்தை கொடுத்துக் கொண்டிருந்தால், தேர்வாளர்கள், உங்களை இந்திய சீனியர் அணிக்கு பரிசீலனை செய்ய வேண்டும்.
தேர்வு வயதை பற்றியது அல்ல. அது நோக்கத்தை பற்றியது. அது ரெட்பால் கிரிக்கெட்டின் பேரார்வம் பற்றியது. நீங்கள் ஆட்டத்தில் கொடுக்கும் கடின உழைப்பை பற்றியது. இதனால் வயதை நான் முற்றிலுமாக நம்பவில்லை.
ஆஸ்திரேலியாவை பார்த்தீர்கள் என்றால், மைக் ஹசி 30 வயதிற்குப் பிறகுதான் அறிமுகம் ஆனார். அதன்பின்பும் அவர் ரன்கள் குவித்தார். ரெட்பால் கிரிக்கெட்டில் அனுபவம்தான் விசயம். தனிப்பட்ட முறையில் ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்கு நான் தேவை என்று நினைத்தேன். இது என்னுடைய தனிப்பட்ட உணர்வு.
இவ்வாறு ரகானே தெரிவித்துள்ளார்.
ரகானே தலைமையில் இந்திய அணி 2020-21 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மண்ணில் 2-1 என தொடரை வென்றது.
2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு ரகானேவுக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை.