அக்ஷர் படேலுக்கு வாய்ப்பு மறுப்பு - வீரர்கள் தேர்வு குறித்து கம்பீர் மீது அதிருப்தி
- அக்ஷர் படேல் ஓரங்கட்டப்பட்டது மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
- வாஷிங்டன் சுந்தர் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய டி20 உலகக்கோப்பையில் போட்டியில் இந்திய வீரர்கள் தேர்வு தொடர்பாக பயிற்சியாளர் கம்பீர், கேப்டன் சூர்ய குமார் யாதவ் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
அணியின் துணை கேப்ட னும், ஆல்ரவுண்டருமான அக்ஷர் படேலுக்கு வாய்ப்பு வழங்காதது விவாத பொருளாகியுள்ளது.
அக்ஷர் படேல் ஓரங்கட்டப்பட்டது மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர் 2 ஓவர் வீசி 17 ரன்களை கொடுத்து விக்கெட் எதுவும் கைப்பற்றவில்லை. பேட்டிங்கிலும் சாதிக்க தவறினார். 11 பந்துகளை சந்தித்து 11 ரன் மட்டுமே எடுத்தார்.
கடந்த காலங்களில் அக்ஷர் படேல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். கடந்த உலக கோப்பையில் தென் ஆப்பி ரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 5-வது வீரராக பேட்டிங் செய்தார். அவர் நீக்கப்பட்டது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
கம்பீரும், சூர்யகுமார் யாதவும் வீரர்கள் தேர்வில் சரியான முறையை கையாளவில்லை என்று கண்டனங்கள் எழுந்து உள்ளன. இதே போல மோசமாக விளையாடி வரும் அபிஷேக் சர்மா, திலக் வர்மா ஆகியோருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுவதும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.