மிதாலி, மந்தனாவுக்கு விருது வழங்கிய பிசிசிஐ
- ஸ்மிருதி மந்தனா ஆண்டின் சிறந்த வீராங்கனைக்கான விருதை தனதாக்கினார்.
- பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ்-க்கு வாழ்நாள் சாதனையாளருக்கான சி.கே.நாயுடு விருது வழங்கப்பட்டது.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்றிரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஆண்டின் சிறந்த வீரருக்கான பாலிஉம்ரிகர் விருதை இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் பெற்றுக் கொண்டார்.
கடந்த ஆண்டு இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்ததுடன் அதில் 4 சதம் உள்பட 754 ரன்கள் குவித்து கலக்கிய சுப்மன் கில், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியிலும் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இவர் இந்த விருதை பெறுவது இது 2-வது முறையாகும்.
கடந்த சீசனில் சர்வதேச கிரிக்கெட்டில் 1,703 ரன்கள் எடுத்து அசத்திய நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆண்டின் சிறந்த வீராங்கனைக்கான விருதை தனதாக்கினார்.
இதே போல் இந்திய கிரிக்கெட்டுக்கு அளித்த மகத்தான பங்களிப்புக்காக இந்திய முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அணியில் அங்கம் வகித்தவரான ரோஜர் பின்னி, பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோருக்கு உயரிய வாழ்நாள் சாதனையாளருக்கான சி.கே.நாயுடு விருது வழங்கப்பட்டது. சர்வதேச போட்டியில் சிறந்த அறிமுக வீரருக்கான விருது வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கும், சிறந்த அறிமுக வீராங்கனைக்கான விருது சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீசரனிக்கும் கிடைத்தது.
விருது பெற்றவர்களை தவிர்த்து ஆண்கள் 20 ஓவர் உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய வீரர்கள், 50 ஓவர் உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்த இந்திய வீராங்கனைகள், ஜூனியர் வீரர், வீராங்கனைகள் உள்ளிட்டோரும் விழாவில் ஒரு குடும்பம் போல் பங்கேற்று சிறப்பித்தனர். அவர்களும் விழாவில் கவுரவிக்கப்பட்டனர். ஐ.சி.சி. தலைவர் ஜெய்ஷா, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் மிதுன் மன் ஹாஸ், துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.