இந்திய அணி பல உலக கோப்பைகளை வெல்லும்: ரோகித் சர்மா நம்பிக்கை
- போட்டியில் தொடர்ந்து உத்வேகம் கிடைப்பது முக்கியம்.
- தற்போது அந்த உத்வேகம் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு கிடைத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் 3-வது முறையாக 20 ஓவர் உலக கோப்பையை வென்று அசத்தியது. இந்த நிலையில் இந்திய அணி இன்னும் பல உலக கோப்பைகளை வெல்லும் என்று முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்து உள்ளார்.
மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் கூறியதாவது:-
இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் சமீபகாலமாகத் தொடர்ந்து ஐ.சி.சி. கோப்பைகளை வென்று வருகிறது. இந்த வெற்றிப் பயணம் வெறும் தொடக்கம் மட்டுமே என்று நான் நம்புகிறேன்.
போட்டியில் தொடர்ந்து உத்வேகம் கிடைப்பது முக்கியம். தற்போது அந்த உத்வேகம் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு கிடைத்துள்ளது. நாம் இந்த வேகத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்த அணிகள் இன்னும் பல உலக கோப்பைகளை வெல்லும்.
இந்த வெற்றிக்கு தனியாக ரகசியம் ஏதுமில்லை. இது முழுக்க முழுக்க வீரர்கள்- வீராங்கனைகளின் கடின உழைப்புக்கு கிடைத்ததாகும். சர்வதேச கிரிக்கெட் வீரர்கள்- வீராங்கனைகள் தாங்கள் எட்டியிருக்கும் இந்தச் சாதனைகளை அடைவதற்காக மிகக் கடுமையாக உழைக்கிறார்கள்.
களத்தில் விளையாடிச் சாதிக்கும் வீரர்கள் மட்டுமே இதற்கு முழு காரணம் அல்ல. இந்த வெற்றிக்கு தங்கள் கடின உழைப்பை அர்ப்பணிக்கும் எண்ணற்ற நபர்களும் இருக்கிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் மேற்கொண்டு வந்த முயற்சிகள் அனைத்தும் தற்போது முழுமையான வெற்றியாக கிடைத்திருப்பதையும், நாங்கள் எதிர்பார்த்த சாதனைகளை எட்டியிருப்பதையும் காண்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.
ஆண்கள் அணி மட்டுமல்லாமல், மும்பையில் பெண்கள் அணியும் உலகக் கோப்பையை வென்ற அந்த தருணம் மிகவும் அற்புதமாக இருந்தது.
இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.