விளையாட்டு
காஞ்சீபுரத்தில் மாவட்ட அளவில் ஹாக்கி போட்டி- வருகிற 30-ந்தேதி நடக்கிறது
மாவட்ட அளவில் வெற்றி பெறும் அணிகள் மண்டலப் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்ட விளையாட்டுப்பிரிவின் சார்பில் மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டி (ஆண்களுக்கு மட்டும்) வருகிற 30-ந் தேதி காலை 9 மணிக்கு காஞ்சீபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு கிடையாது. போட்டிகள் அனைத்தும் லீக் முறையில் நடத்தப்படும். போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் 29-ந் தேதி அன்று மாலை 5 மணிக்குள் காஞ்சீபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் அணிகளை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மாவட்ட அளவில் வெற்றி பெறும் அணிகள் மண்டலப் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
எனவே காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரி, தனியார் நிறுவனங்களில் பயிலும், பணிபுரியும் வீரர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.